பாகிஸ்தானில் தேர்தல் எப்போது நடத்தலாம்..? - தேதிகளை பரிந்துரைக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது, பிரதமரின் பரிந்துரைபேரில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது தொடர்பான பிரச்சினையை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் அமர்வு நடத்தியது. அப்போது, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் தொடர்பான வெளிநாட்டு சதி குறித்து மேலும் அறிவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை தொடர்ந்து இன்று நடக்கிறது. இதற்கு மத்தியில் 90 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு, உகந்த தேதிகளை பரிந்துரைக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி நேற்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி நேற்று கடிதம் எழுதினார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதும் பாகிஸ்தானில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும்.