போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படாது: இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-17 16:29 GMT
கொழும்பு

இலங்கை, கிட்டத்தட்ட 75 ஆண்டு கால வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னியச்செலாவணியில்லாமல் போய், இறக்குமதி பெரும்பாதிப்புக்குள்ளானதால் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்து, சாமானிய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. எரிபொருட்கள் தட்டுப்பாடு, மின் வெட்டு என மக்கள் அல்லாடுகின்றனர்.

இனியும் பொறுத்துப்பயனில்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபச்சேவுக்கு எதிராக மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் செயலக பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து 9-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில்  இலங்கை மக்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிபர் கோத்தபய செயலக பகுதியில் நடந்து வருகிற போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களை தாக்குவதற்கும், அடித்து விரட்டுவதற்கும் ராணுவத்தினர் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இதை ராணுவம் நேற்று திட்டவட்டமாக மறுத்து இருந்தது. இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சக  அதிகாரிகளும் இதை உறுதிபடுத்தியுள்ளனர்.

இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கமல் குணரத்னே  கூறுகையில், அமைதியான போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படாது. எனினும் வன்முறை ஏற்படும் பட்சத்தில் போலீஸ் உதவி கோரினால் ராணுவம் களம் இறங்க தயங்காது” என்றார். 

மேலும் செய்திகள்