‘இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்’ - அதிபருக்கு, சபாநாயகர் கோரிக்கை
இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் என்று அதிபருக்கு, சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் கை கோர்த்துள்ளன.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், நாட்டின் தற்போதைய நிலைமை பற்றியும், வன்முறை கோரத்தாண்டவமாடியது குறித்தும் விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் தற்போது பிரதமரும், அரசும் இல்லாததால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மே 17-ந் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இலங்கையில் புதிய அரசு அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிற அரசியல் கட்சி தலைவர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேசுவார் என அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, கட்சி தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே தெரிவித்தார்.