3-வது திருமணம் செய்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே
முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே லண்டனில் திரினா என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.;
லண்டன்,
நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் ஹரீஷ் சால்வே (வயது 68). 1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2002-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
சால்வேக்கு முதன்முறையாக மீனாட்சி என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர், இந்த 30 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்த பின்னர், கடந்த 2020-ம் ஆண்டில் கரோலின் பிரஸ்சார்டு என்பவரை சால்வே 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சால்வே 3-வது முறையாக திரினா என்பவரை கரம் பிடித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் லலித் மோடி, அவருடைய காதலி மற்றும் மாடல் அழகியான உஜ்வாலா ராவத், ஸ்ரீபிரகாஷ் லோகியா, லட்சுமி மிட்டல், சுனில் மிட்டல் மற்றும் கோபிசந்த் இந்துஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சால்வேவுக்கு நாட்டின் உயரிய பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது. சால்வே, பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை கையாண்ட அனுபவம் கொண்டவர். பாகிஸ்தான் கோர்ட்டால் உளவாளி என குற்றம் சாட்டப்பட்ட, இந்தியரான குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதிட்டுள்ளார். 2002-ம் ஆண்டு, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் வழக்கிலும் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், பாம்பே ஐகோர்ட்டால் பின்னர் அவர் வழக்கில் இருந்து முழுவதும் விடுவிக்கப்பட்டார்.