நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து 13-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது: இந்திய தூதரகம் தகவல்

இலங்கையுடன் பவர் கிரிட் இணைப்பு, இருவழி குழாய் இணைப்பு மற்றும் பொருளாதார வழித்தடம் போன்ற திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது.

Update: 2024-05-06 08:45 GMT

கொழும்பு:

இந்தியா-இலங்கை இடையே சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் அருகே உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு மோசமான வானிலையை காரணம் காட்டி கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் 13ம் தேதி முதல் நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அதிபர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை வலுப்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அங்கமாகும். கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது, மக்களை மையமாக கொண்ட இந்திய அரசின் கொள்கைகளை உறுதி செய்கிறது.

எதிர்காலத்தில், மின்விநியோகம் வழங்கும் வகையில் பவர் கிரிட் இணைப்பு, இருவழி குழாய் இணைப்பு மற்றும் பொருளாதார வழித்தடம் என இலங்கையுடனான இணைப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்தியா 63.65 மில்லியன் டாலர்களை, அதாவது முழு திட்டச் செலவையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை காட்டுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் பயணிகள் கப்பல் சுமார் மூன்றரை மணி நேரத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையும். இண்ட்ஸ்ரீ கப்பல் சேவை என்ற தனியார் நிறுவனம் மூலம் கப்பல் இயக்கப்படும்.

இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு விசா தேவையில்லை, பாஸ்போர்ட் இருந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்