"இந்திய தேர்தலில் தலையிடவில்லை" - ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

நாங்கள் இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 09:30 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.

இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இதனை நிராகரித்த மத்திய அரசு, இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யுஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியிருப்பதாவது:- இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. இந்திய உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "நிச்சயமாக இல்லை. நாங்கள் இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டு தேர்தல் விவகாரத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை" என்றார்.

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சியில் இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டு தவறானது என்றும் இதற்காக எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் இதுவரை அமெரிக்கா வழங்கவில்லை என்றும் ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மில்லர், "நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளே. அது தொடர்பான குற்றப்பத்திரிகை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

யார் வேண்டுமானாலும் சென்று அதனை படித்து கொள்ளலாம். இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து நான் எதுவும் பேசமுடியாது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்