ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2018-07-20 22:15 GMT
பெரம்பலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நேற்று என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில் களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில், திங்கட் கிழமை, வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் நடை திறக்கப்படுவது வழக்கம்.

நேற்று ஆடி முதல்வெள்ளிக்கிழமை என்பதால் கோவில் காலை 6 மணியளவில் நடைதிறக்கப்பட்டது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர் களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அகல் விளக்குகள் தீபம் ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதால் கோவில் முன்பு விளக்கு ஏற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாடா விளக்கில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர் களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஆண்டுதோறும் பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காப்பு கட்டி விரதம் இருந்த விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். பெருமாள் கோவிலில் இருந்து காலையில் புறப்பட்ட பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மாரியம்மன் கோவிலுக்கு மதியம் சென்றடைந்தது. இதையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி நேற்று அரியலூரில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போல் அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக புறப்பட்டனர். மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் தாண்டவராய தெரு வழியாக வலம் வந்து மேலத்தெருவில் உள்ள படைபத்து மகாமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அவர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்