சதுரகிரி மலை சிறப்பு

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சாப்டூர் மற்றும் தாணிப்பாறை மலைப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு கிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கு நடுவில், சஞ்சீவிகிரி என்ற மலையில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது.

Update: 2021-06-29 13:48 GMT
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சாப்டூர் மற்றும் தாணிப்பாறை மலைப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு கிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கு நடுவில், சஞ்சீவிகிரி என்ற மலையில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. சஞ்சீவி கிரி மலை என்பதே பின்னாளில், ‘சதுரகிரி மலை’ என மாறியது. கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுந்தரலிங்கம், சந்தன லிங்கம் என்ற பெயர்களில் இரண்டு திருமேனிகளாக இறைவன் அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும், காயகற்ப மூலிகை வளம் நிறைந்ததுமாக இருக்கிறது இந்தத் தலம். அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.

* சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலையில் ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று உடலில் பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

* சந்தன மகாலிங்கம் கோவில் அருகே 18 சித்தர்கள் சன்னிதி உள்ளது. இங்கு ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை, போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்த போதுதான் செய்தார் என்று சொல்கிறார்கள்.

* இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும் என்கிறார்கள். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்ததாக சொல்லப்படுகிறது.

* மகாலிங்கம் கோவிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி’ ஆலயம் உள்ளது.

* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் தொடங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் இங்கு பிரசாதமாக தரப்படுகிறது.

* சுந்தர மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் தரிசிக்காமல் சென்றார். இதனால், சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள், பார்வதி தேவி. சிவலிங்கத்திற்கு தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.

* சதுரகிரி சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்' இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களில் இருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

மேலும் செய்திகள்