திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்: கொடிப்பட்டம் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (புதன்கிழமை) கொடிேயற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது;

Update:2022-08-16 23:35 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (புதன்கிழமை) கொடிேயற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.

ஆவணி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது.

விழாவையொட்டி நேற்று மாலையில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. முன்னதாக வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கும் தீபாராதனை நடைபெற்றது.

கொடிப்பட்டம் வீதி உலா

பின்னர் பாலசுப்பிரமணிய அய்யர் கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு, கோவில் தெய்வானை யானையின் மீது அமர்ந்து 8 வீதிகளிலும் உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.

விழாவில் கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், திருவிழா பணியாளர் ராஜ்மோகன், பேஸ்கார் ரமேஷ், 14-ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை செயலாளர் அய்யனார், பொருளாளர் மாரியப்பன், துணைத்தலைவர் மாரிமுத்து உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுவாமி வீதி உலா

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் திருநாளான வருகிற 26-ந்தேதி காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்களின்றி எளிமையாக கோவில் வளாகத்திலும், கோவில் உள்பிரகாரத்திலும் நடந்தது. இந்த ஆண்டு சுவாமி-அம்பாள் வழக்கம்போல் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்