சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி திறக்கப்படுகிறது.

Update: 2024-05-09 01:08 GMT

திருவனந்த்நபுரம், 

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை நடை பெறுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்