‘இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்’ விராட்கோலிக்கு, கங்குலி அறிவுரை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

Update: 2018-09-13 22:15 GMT

கொல்கத்தா, 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் விராட்கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டன் விராட்கோலிக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எந்தவொரு அணியும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் இங்கிலாந்து போட்டி தொடரில் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் 10 மடங்கு சிறந்ததாக இருந்தது. இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ரிஷாப் பான்ட் ஆட்டத்தை குறிப்பிடலாம். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொணர வேண்டியது கேப்டனின் முக்கிய பொறுப்பாகும். கேப்டன் வீரர்களின் தோளில் கை போட்டு அரவணைத்து பேசினால் அணி தானாகவே முன்னேற்றம் காணும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்