பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 145 ரன்னில் சுருண்டது.

Update: 2018-10-17 22:45 GMT
அபுதாபி,

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 50.4 ஓவர்களில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 39 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி நேற்றைய முடிவில் 44 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை ஒட்டுமொத்தமாக 281 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

மேலும் செய்திகள்