பெங்காலுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி 141 ரன்னில் ஆல்-அவுட்

பெங்காலுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில், தமிழக அணி 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

Update: 2018-11-30 22:05 GMT
சென்னை,

ரஞ்சி கிரிக்கெட்டில், தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தமிழகம் 263 ரன்களும், பெங்கால் 189 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாளான நேற்று பெங்காலின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 62.5 ஓவர்களில் 141 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 38 ரன்கள் எடுத்தார். பெங்கால் சுழற்பந்து வீச்சாளர் விருத்திக் சட்டர்ஜீ 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி ஆட்ட நேர முடிவில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. பெங்காலின் வெற்றிக்கு மேற்கொண்டு 129 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. தற்போதைய சூழலில், கடைசி நாளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஏதாவது மாயாஜாலம் காட்டினால் மட்டுமே தமிழக அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடந்த பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 175 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 179 ரன்னில் சுருண்டது. கவுதம் கம்பீர் 60 ரன்னில் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து 5 ரன் இலக்கை பஞ்சாப் அணி 2.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்