குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே கைது

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே நேற்று அதிகாலை கொழும்பு நகரில் சென்ற போது அவருடைய வாகனம் ஆட்டோ மீது மோதியது.

Update: 2019-03-31 22:00 GMT

கொழும்பு,

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே நேற்று அதிகாலை கொழும்பு நகரில் சென்ற போது அவருடைய வாகனம் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் காயமடைந்தார். போலீஸ் விசாரணையில், கருணாரத்னே குடிபோதையில் தனது வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். அவர் பயன்படுத்திய வாகன விவரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

உலக கோப்பை போட்டியையொட்டி ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டன் பொறுப்புக்கும் கருணாரத்னேவின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் அவர் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 30 வயதான கருணாரத்னே இதுவரை இலங்கை அணிக்காக 60 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். அவரது தலைமையிலான இலங்கை அணி கடந்த பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்