‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற நாங்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’ - மொயீன் அலி கருத்து

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற நாங்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என மொயீன் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-18 23:11 GMT
புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை பட்டம் வென்றதில்லை. 2016-ம் ஆண்டில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஆண்டு கடைசி இடத்தையே பிடித்தது. விராட்கோலி, டிவில்லியர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்று இருந்தாலும் அந்த அணியால் ஜொலிக்க முடியவில்லை. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டி தொடரில் நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் எப்பொழுதும் நிதானமாகவே வெற்றி பெற ஆரம்பிக்கிறோம். குறிப்பாக பெங்களூருவில் விளையாடும் போது துணிச்சலுடன் விளையாட வேண்டும். பெங்களூரு ஆடுகளம் மிகவும் நல்லதாகும். பவுண்டரி எல்லை சிறியதாக இருப்பதால் இது பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எங்கள் அணியின் வெற்றிக்காக விராட்கோலி, டிவில்லியர்சை மட்டும் நாங்கள் நம்பி இருக்கக்கூடாது. நான் உள்பட பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்