இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் பும்ரா, தவான்

காயத்தால் ஓய்வில் இருந்த பும்ராவும், ஷிகர் தவானும், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குரிய இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

Update: 2019-12-23 12:17 GMT
புதுடெல்லி,

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவுக்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. 2-வது ஆட்டம் இந்தூரிலும் (ஜன.7), 3-வது ஆட்டம் புனேயிலும் (ஜன.10) நடக்கிறது.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டிலும் (ஜன.17), கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவிலும் (ஜன.19) நடைபெறுகிறது.

இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் ஆலோசித்து அணி பட்டியலை வெளியிட்டனர்.

இதன்படி முதுகுவலியால் கடந்த 4 மாதங்கள் விளையாடாமல் உள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார். இருப்பினும் மீண்டும் சர்வதேச போட்டியில் கால்பதிப்பதற்கு முன்பாக அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். இதே போல் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த இடக்கை ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு காயம் குணமடைந்து விட்டதால் அவரும் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா, பவுலர் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஆடுவார்கள்.

20 ஓவர் தொடரில் மாற்று தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு முதுகில் ஏற்பட்ட காயத்தன்மை அதிகமாகி விட்டதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இலங்கை 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி.

பின்னர் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதுகு வலிக்கு ஆபரேஷன் செய்து கொண்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். ஜனவரி 3-வது வாரத்தில் அவர் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். டோனி குறித்து கருத்து சொல்லமாட்டேன். முதலில் அவர் அணித் தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பதாக கூறட்டும்.

ரிஷாப் பண்ட் தனது விக்கெட் கீப்பிங் திறமையை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அவருக்கு சிறப்பு பயிற்சியாளர் மூலம் பிரத்யேகமாக விக்கெட் கீப்பிங் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்’ என்றார்.

இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 4 நாள் ஆட்டம் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியும் அறிவிக்கப்பட்டது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 8 மாத தடையை அனுபவித்த இளம் வீரர் பிரித்வி ஷா இரண்டு வடிவிலான இந்திய ‘ஏ’ அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

4 நாள் ஆட்டத்துக்கு ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அணியில் மயங்க் அகர்வால், சுப்மான் கில் ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் 2-வது 4 நாள் போட்டிக்கான அணியில் அஸ்வின், புஜாரா, ரஹானே, விருத்திமான் சஹா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், கலீல் அகமது உள்ளிட்டோரும் தேர்வாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்