தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் இங்கிலாந்து அணி 269 ரன்னில் ‘ஆல்-அவுட்’

தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து இருந்தது.

Update: 2020-01-04 22:15 GMT
கேப்டவுன்,

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91.5 ஓவர்களில் 269 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆலிவர் போப் 61 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் பீட்டர் மாலன் 5 ரன்னிலும், சுபாய் ஹம்சா 5 ரன்னிலும், கேப்டன் டுபிளிஸ்சிஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு வான்டெர் துஸ்சென், தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 157 ரன்னாக உயர்ந்த போது டீன் எல்கர் (88 ரன்கள்) டோமினிக் பிஸ் பந்து வீச்சில் ஜோரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த குயின்டான் டி காக் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். நிலைத்து நின்று ஆடிய வான்டெர் துஸ்சென் 68 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து பிரிட்டோரிஸ் 4 ரன்னிலும், கேசவ் மகராஜ் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 84.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. பிலாண்டர் 13 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், சாம் குர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்