முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது.

Update: 2020-02-01 00:23 GMT
கான்பெர்ரா,

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

கான்பெர்ராவில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 67 ரன்கள்(44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (42 ரன்) சிக்சர் அடித்து இலக்கை எட்ட வைத்தார். ஷபாலி வர்மா (30 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

இன்று (சனிக்கிழமை) கான்பெர்ராவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்