ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை; இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது - பிசிசிஐ

ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்தநிலையில், இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Update: 2020-05-10 12:08 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்றும், வெளிநாடுகளில் கூட நடக்கலாம் என்ற செய்திகள் உலா வருகின்றன.

இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:-

ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது. இந்தியாவில் தற்போது அதிகமான வைரஸ் பாதிப்புக்குள்ளான சிவப்பு மண்டலங்கள் உள்ளன. கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் உடல் நலனும் இப்போது முக்கியம். இப்போது உள்ள சூழ்நிலையில் எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்