எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்: விராட்கோலி சொல்கிறார்

அனுஷ்கா சர்மா இடம் பெற்றால், தனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-19 00:12 GMT
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது விராட்கோலி பதிலளித்து பேசுகையில், ‘என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். ஆனால் அந்த படத்தில் அனுஷ்கா சர்மாவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அப்படி நடித்தால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முன்பு எப்பொழுதும் நான் இதுபோல் இருந்ததில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் கருணை உள்ளம் இருக்கும். ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அதனை வெளிக்கொண்டு வரும் நபர் ஒருவர் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அது அனுஷ்கா தான். அவரை பார்த்த உடனேயே அதனை புரிந்து கொண்டேன். இந்த வாழ்க்கை எனக்காக மட்டும் வாழ வேண்டியது அல்ல. மற்றவர்களுக்காவும் வாழ வேண்டும் என்பதை உணர வைத்தார்.

அனுஷ்காவை சந்திக்கும் முன்பு நான் சுயநலமாக இருந்தேன். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தான் முழுமையடைய முடியும் என்பதை அவர் உணர்த்தினார். எனது சொந்த மாநிலத்தில் (டெல்லி) சில சமயங்களில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நியாயமாக இருக்காது. ஒரு முறை ஒரு நபர் அணிக்கு நான் தேர்வு செய்யப்பட எனது தந்தையிடம் பணம் கேட்டார். அதற்கு எனது தந்தை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால் செய்யுங்கள். லஞ்சம் கொடுத்து தேர்வாக வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து விட்டார். அதனால் நான் தேர்வு செய்யப்படவில்லை. அதனை நினைத்து கதறி அழுதேன். ஆனால் அசாதாரணமாக நடந்து கொண்டால் வெற்றியடையலாம் என்பதை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது. எனது கடின உழைப்பால் அணியில் இடம் பிடித்தேன். எனது தந்தை எனக்கு சரியான வழியை காட்டி இருக்கிறார்’ என்றார்.

மேலும் செய்திகள்