இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை

இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

Update: 2020-07-03 01:01 GMT
கொழும்பு,

2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடிய விதம், கடைசி நேரத்தில் அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில குழுவினர் ஆட்டத்தை ‘பிக்சிங்’ செய்து விட்டனர். இல்லாவிட்டால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும் என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே முன்னாள் கேப்டன் ரணதுங்காவும் இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கூறியிருந்தார். இது குறித்து இலங்கை அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர். அந்த சமயம் இலங்கை அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா ஆகியோர் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு இலங்கை அணியை வழிநடத்திய சங்கக்கரா நேற்று விசாரணை குழு முன் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 10 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நீடித்தது. அத்துடன் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அடுத்து இறுதி ஆட்டத்தில் சதம் அடித்த இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்