இங்கிலாந்து பெண்கள் அணி 396 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் நடந்து வருகிறது.

Update: 2021-06-18 00:52 GMT
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சில் 121.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சோபியா டுங்லி 74 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களம் கண்ட ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 167 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய ஷபாலி வர்மா 96 ரன்னில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் மந்தனாவும் (74 ரன்) நடையை கட்டினார். அடுத்து வந்த கேப்டன் மிதாலிராஜ் (2 ரன்) உள்ளிட்ட வீராங்கனைகள் விரைவில் ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 60 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்