ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்து அஜிங்க்யா ரகானே புதிய சாதனை..!!

அஜிங்க்யா ரகானே ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-04-01 16:19 GMT
Image Courtesy : @IPL
மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த தவான் - ராஜபக்சா அதிரடியாக விளையாட தொடங்கினர். ஆனால் இந்த ஜோடி வெகு நேரம் நிலைக்கவில்லை. ராஜபக்சா 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மாவி பந்துவீச்சில் சௌதீ-யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து ஷிகர் தவான் 16 ரன்களில் சௌதீ பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய  லிவிங்ஸ்டன் 19 ரன்களில் வெளியேறினார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஷாருகான் மற்றும் ராகுல் சஹர் டக் அவுட்டாகி வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி நேரத்தில் வாணவேடிக்கை காட்டினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டாகியது.

இதன் மூலம் கொல்கத்தா அணி 138 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே 12 ரன்கள் மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதே நேரத்தில் இந்த போட்டியில் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்