சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை பிளாக் செய்தது ஏன்? என்பது இன்றளவும் தெரியவில்லை - வார்னர்

வார்னர், ஐ.பி.எல். தொடரில் 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஐதராபாத் அணியில் விளையாடினார்.

Update: 2024-05-09 19:40 GMT

image courtesy: AFP

ஐதராபாத்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை டெல்லி அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார். அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்ட அவர் 2021-வரை சன்ரைசர்ஸ் அணிக்காகவே விளையாடினார். அதிலும் குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு டேவிட் வார்னரின் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியே ஐ.பி.எல். கோப்பையையும் கைப்பற்றியிருந்தது.

இப்படி நீண்ட ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியுடன் இருந்து வந்த அவருக்கு ஐதராபாத் அணியை சேர்ந்த ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை இன்றளவும் அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முதல் ஐந்து போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த பிறகு டேவிட் வார்னர் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு சேர்த்து பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்பட்டு டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார்.

அதோடு அந்த ஆண்டு நடைபெற்ற தொடரோடு சன்ரைசர்ஸ் அணியால் ஓரங்கட்டப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சமூக வலைதளத்தில் பிளாக் செய்தது அதிகமாக காயப்படுத்தியது. மேலும் என்னை விட எனது ரசிகர்கள் காயப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய மிக முக்கியமான ஒரு உறவு என்றால் ரசிகர்கள் உடனான எனது பிணைப்புதான். ஐதராபாத் ரசிகர்கள் என்னுடன் அவ்வளவு பிணைப்பாக இருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை பிளாக் செய்தது ஏன்? இப்படி ஏன் செய்தார்கள்? எதற்காக இப்படி நடந்து கொண்டார்கள்? என்பது இன்றளவும் எனக்கு தெரியவில்லை இருந்தாலும் என்னை நேசிக்கும் ரசிகர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்