துளிகள்

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார்.

Update: 2018-03-15 21:00 GMT
* இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். அத்துடன் முகமது ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவர் பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் பெற்றதாகவும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இந்த நிலையில் போலீசில் அளித்த புகாரின் நகலை ஹசின் ஜஹன் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு நேற்று அனுப்பி வைத்தார். இதனால் முகமது ஷமிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

* சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3 இடங்கள் முன்னேறி 99-வது இடத்தை பிடித்துள்ளது.

* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு பார்சிலோனாவில் அரங்கேறிய நாக்-அவுட் சுற்றின் 2-வது ரவுண்டில் பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப் 3-0 என்ற கோல் கணக்கில் செல்சியாவை (இங்கிலாந்து) வீழ்த்தியது. பார்சிலோனா அணியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி இரட்டை கோல் (3 மற்றும் 63-வது நிமிடம்) அடித்தார். இதையும் சேர்த்து சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் மெஸ்சியின் கோல் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது சுற்று 1-1 என்ற கணக்கில் டிரா ஆகி இருந்தது. இரு ஆட்டங்களின் முடிவில் பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் கால்இறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்