காதல் திருமணத்தை உறுதி செய்தார், சாய்னா

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது காதல் திருமணத்தை உறுதி செய்தார்.

Update: 2018-10-08 22:45 GMT
ஐதராபாத்,

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரரும், தன்னுடன் ஒரே அகாடமியில் (கோபிசந்த் அகாடமி) பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை வருகிற டிசம்பர் 16-ந் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த திருமணம் குறித்து சாய்னா நேவால், காஷ்யப் ஆகியோர் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர்.

இந்த நிலையில் காஷ்யப்பை டிசம்பர் 16-ந் தேதி கரம் பிடிக்க இருப்பதை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார். இது குறித்து சாய்னா நேவால் அளித்த ஒரு பேட்டியில், ‘2007-ம் ஆண்டு முதல் காஷ்யப்பை காதலித்து வருகிறேன். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தான் இருவரும் திருமணத்தை தாமதப்படுத்தினோம். போட்டி நிறைந்த உலகில் நாம் வசித்து வருகிறோம். ஒருவருடன் நெருக்கமாகுவது என்பது கடினமானதாகும். ஆனால் நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் எளிதாக ஒருவருக்கொருவர் நெருங்கி பேசினோம். காதலை என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வது வாடிக்கையாகும். நான் யாருடன் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் எங்கள் காதலை புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்