துளிகள்

ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஓங்கோலில் நடந்து வருகிறது.

Update: 2018-11-21 21:30 GMT

* இலங்கை–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், ஆல்–ரவுண்டர் சாம் குர்ரன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட், பேர்ஸ்டோ ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் 2–வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத இலங்கை அணி கேப்டன் தினேஷ் சன்டிமால் உடல் தகுதியை எட்டாததால் கடைசி டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோ‌ஷல், முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான டியாகோ எலியாஸ்சை (பெரு) எதிர்கொண்டார். 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சவுரவ் கோ‌ஷல் 2–11, 2–11, 11–13 என்ற செட் கணக்கில் டியாகோ எலியாஸ்சிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

* 16 அணிகள் பங்கேற்கும் 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி நேற்று அதிகாலை ஒடிசா வந்து சேர்ந்தது. அர்ஜென்டினா அணியினருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அர்ஜென்டினா அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஸ்பெயின், நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். அர்ஜென்டினா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை (29–ந் தேதி, மாலை 5 மணி) சந்திக்கிறது.

* ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஓங்கோலில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திர அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 89.5 ஓவர்களில் 216 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கிரிநாத் ரெட்டி 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தமிழக அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டும், நடராஜன், சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அபினவ் முகுந்த் 31 ரன்னிலும், கவுசிக் காந்தி 38 ரன்னிலும், கேப்டன் பாபா இந்திரஜித் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பாபா அபராஜித் 27 ரன்னுடனும், ஜெகதீசன் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்