உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் ஆகாஷ் குமார் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அரைஇறுதிக்குள் நுழைந்ததால் ஆகாஷ் குமார் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
பெல்கிரேடு,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதன் 54 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் தேசிய சாம்பியனான 21 வயது இந்திய வீரர் ஆகாஷ் குமார், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான யோல் பினோல் ரிவாஸ்சை (வெனிசுலா) சந்தித்தார்.
இதில் அபாரமான தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் குமார் 5-0 என்ற கணக்கில் யோல் பினோல் ரிவாஸ்சை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். ராணுவ வீரரான இவர் பெற்றோரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரைஇறுதிக்குள் நுழைந்ததால் ஆகாஷ் குமார் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் அவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.