இந்திய நடைபந்தய வீரர்கள் விகாஷ், பரம்ஜீத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஆசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது.
நோமி,
ஆசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது. இதில் ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் விகாஷ் சிங் ஒரு மணி 20 நிமிடம் 0.5 வினாடிகளில் 2-வது இடமும், பரம்ஜீத் சிங் பிஷ்த் 1 மணி 20 நிமிடம் 0.8 வினாடிகளில் கடந்து 3-வது இடமும் பெற்றனர். சீனாவின் கியான் ஹைய்பெங் (1 மணி 19.09 நிமிடம்) தங்கப்பதக்கம் வென்றார்.
ஆகஸ்டு மாதம் ஹங்கேரியில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் 20 கிலோமீட்டர் நடை பந்தயத்திற்கான தகுதி இலக்காக 1 மணி 20 நிமிடம் 10 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 3 பேருமே அந்த இலக்கை கடந்து விட்டதால் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவின் 20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீரர் அக்ஷ்தீப்சிங் 1 மணி 20 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 3-வதாக வந்து வெண்கலப்பதக்கம் வசப்படுத்தினார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.