உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜூன் தங்கப்பதக்கம் வென்றார்..!
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.;
image courtesy: SAI Media twitter
சாங்வான்,
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் பபுடா 261.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் அர்ஜூன் பபுடா 17-9 என்ற புள்ளி கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான அமெரிக்காவின் லூகாஸ் கோசெனீஸ்கியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான அர்ஜூன் பபுடா சீனியர் பிரிவில் சர்வதேச போட்டியில் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அவர் 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். லூகாஸ் கோசெனீஸ்கி வெள்ளிப்பதக்கமும், இஸ்ரேல் வீரர் செர்ஜி ரிச்டெர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.