மராட்டிய ஓபன் டென்னிஸ்: குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகல்

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகினார்.

Update: 2018-12-28 23:00 GMT
புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், நடப்பு சாம்பியனான பிரான்சின் ஜிலெஸ் சிமோன், கொரியாவின் ஹியோன் சங், இந்தியாவின் ராம்குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான தகுதிசுற்று போட்டி இன்று தொடங்குகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதை உறுதி செய்திருந்த உலக தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கால்முட்டி காயத்தால் அவதிப்படுவதாகவும், மராட்டிய ஓபனில் ஆட முடியாமல் போவதற்காக ரசிகர்களிடம், போட்டி அமைப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தான் புத்தாண்டை கொண்டாடி வந்தேன். இந்த முறை அதை தவற விடுவதாகவும் சிலிச் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக போர்ச்சுகல் வீரர் பெட்ரோ சோசா பிரதான சுற்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்