பெட் கோப்பை டென்னிஸ்: இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா தேர்வு

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில், இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-05-11 23:15 GMT
புதுடெல்லி, 

பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் இதயம் கவர்ந்தவர்(ஹார்ட் அவார்டு) விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 2 வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. ‘ஆசிய-ஓசியானா’ மண்டலத்தில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, இந்தோனேஷியா வீராங்கனை பிரிஸ்கா நுக்ரோகோ ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இவர்களில் விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்க ஆன்லைன் மூலம் ஒரு வாரம் வாக்கெடுப்பு நடததப்பட்டது. மொத்தம் 16,985 ஓட்டுகள் பதிவானது. இதில் சானியா மிர்சா 10 ஆயிரத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்று இந்த பிரிவில் இருந்து இதயம் கவர்ந்த வீராங்கனை விருதுக்கு தேர்வானார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றார். இது குறித்து 33 வயதான சானியா மிர்சா கூறுகையில், ‘இந்த விருதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இதன் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையான ரூ.1.½ லட்சம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்