’பராசக்தி’ படத்தில் 25 இடங்களில் கட்: அதிர்ச்சி கொடுத்த சென்சார் போர்டு
படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்தும், காட்சிகளை கட் செய்தும், அதன் பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு வெளிவர இருக்கும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், 25 இடங்களில் வசனங்களை மாற்றியோ, நீக்கியோ உள்ளனர்.
“தீ பரவட்டும்” என்ற வார்த்தை “நீதி பரவட்டும்” என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், “பட்டு நூலா”, “பாஸ்டர்டு”, “கொடியில காயவெச்ச துணி மாதிரி”, “இந்தி கத்துக்கிட்டு” போன்ற வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. “இந்தி என் கனவை அழித்துட்டு” என்ற வார்த்தை “என் ஒரே கனவை இந்தி திணிப்பு அரித்திட்டு” என்று மாற்றப்பட்டுள்ளது. “இந்தி அரக்கி” என்ற வார்த்தை “அரக்கி” என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தாய்–மகள் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.
இப்படி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்தும், காட்சிகளை கட் செய்தும் அதன் பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 52 விநாடிகள் காட்சி படத்தில் நீக்கப்பட்டுள்ளது. 27 விநாடிகள் வசனம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.