என் திரைவாழ்வில் புதிய முயற்சி - நடிகர் பாபி சிம்ஹா
மெஹர் யாரமதி இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.;
பாபி சிம்ஹாவின் 25வது திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை ஹெபா படேல் ஹீரோயினாக நடிக்கிறார். மெஹர் யாரமதி இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இப்படத்தில் தனிகெல்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சித்தார்த்த சதாசிவுனி, கலை இயக்குநராக விவேக் அண்ணாமலை ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் பாபி சிம்ஹா பேசும்போது, “தெலுங்கில் நேரடியாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளைக் கேட்டேன். ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்தது. இது, நடிகனாக எனக்குச் சவாலான கதை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் திரை வாழ்க்கையில் இது புதிய முயற்சி. வரும் 22ந் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.