"பேட் கேர்ள்" பட டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவு

"பேட் கேர்ள்" படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.;

Update:2025-07-19 10:43 IST

சென்னை,

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேட் கேர்ள் படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது பேட் கேர்ள் படம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது, சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற பதிவேற்றங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்