யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் இணைந்த பிரபல நடிகை
பிரபல நடிகையான ருக்மணி வசந்த், யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.;
மும்பை,
நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'டாக்ஸிக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், பிரபல நடிகையான ருக்மணி வசந்த், யாஷின் டாக்ஸிக் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகை ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.