"விஜய் இவர்களை சமாளித்தாலே அரசியலில் ஜெயிச்சிடுவாரு"- எச்.வினோத் கருத்து
விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
"சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை" போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “முட்டாள்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என தெரியாதவர்கள். அறிவாளிகளுக்கு நல்லது, கெட்டது தெரியும்.
அறிவாளி அயோக்கியர்கள், எது நல்லது என்பதை வெளியில் சொல்லாமல் அதை தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடியாள் போல மோசமான விஷயங்களை செய்வார்கள். இந்த 4 வகை மனிதர்களை சமாளித்தாலே போதும், விஜய் அரசியலில் ஜெயிச்சிடுவார்னு நம்புறேன்.." எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார்.