ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விவகாரம் - நடிகர் சூரி வேதனை

"மாமன்" திரைப்படம் வெற்றி அடைய வேண்டி, மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி வேதனை அடைந்துள்ளார்.;

Update:2025-05-16 16:10 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது. கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சூரியின் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் 'மாமன்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாற வேண்டும் என சூரியின் ரசிகர்கள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்துள்ளனர். மேலும் அப்போது சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்துள்ளார்கள். இந்த வேண்டுதல் நேற்று நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் சூரியின் ரசிகர்கள் பேசுகையில், "மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலை அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வேண்டியுள்ளோம். படம் வெற்றி பெற வேண்டும் என மண்சோறு சாப்பிட்டு உள்ளோம். மண்ணின் மைந்தன் அண்ணன் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துள்ளோம். படம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும்போது படம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த படத்திற்கு மட்டும் இல்லை, இனி அண்ணன் சூரி நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் நாங்கள் இது போல செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.


'மாமன்' திரைப்படம் வெற்றி அடைய வேண்டி, மண்சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி வேதனை அடைந்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த நடிகர் சூரி " 'மாமன்' படம் வெற்றி அடைய மதுரையில் மண்சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டு விட்டு மண்சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்