மதுரை ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்
சிவபெருமான் வியாபாரியாக வந்து, மன்னனின் மணி மகுடத்திற்கு தேவையான நவமணிகள் கொடுத்ததை பக்தர்களுக்கு விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.;
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்துவருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை உணர்த்தும் சிறப்பு அலங்காரங்கள் இவ்விழாவில் நாள்தோறும் இடம்பெறுகின்றன. விழாவின் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த கோலத்தில் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார்.
ஆவணி மூலத் திருவிழாவின் 3-ம் நாளான இன்று மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரருடன்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாணிக்கம் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
மதுரையை வீரபாண்டியன் என்ற அரசன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒருநாள் வேட்டையாட சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். அரசன் மறைந்த செய்தி கேட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த நேரத்தில் அரசனின் ஆசைநாயகிகளின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், அரசனின் மகுடத்தையும் கவர்ந்து சென்றனர்.
இதற்கிடையில் இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போதுதான், மணிமகுடம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் களவு போனது தெரியவந்தது. இதுபற்றி சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோவிலுக்கு சென்றனர். அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். மேலும் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்ற தகவல்களையும் கூறினார்.
மேலும், புதிய மணிமகுடம் செய்து அதனை இளவரசனுக்கு சூட்டி அவரை அபிஷேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு இறைவன் மறைந்தார். அதன்படி முடிசூட்டிக்கொணட அபிஷேகப்பாண்டியன் பல காலம் நல்லாட்சி புரிந்தான். அதேசமயம் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப்பெற்று அனைவரும் நலமுடன் வாழ்ந்தார்கள் என்று புராணம் கூறுகிறது.