குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.. அருவிகளில் நீராடி விரதம் தொடங்கினர்
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.;
கார்த்திகை மாதம் முதல் தேதியில் அய்யப்ப பக்தர்கள் மாலையிட்டு 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இதனால் காலை முதலே கோவில்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாகவும் ஆன்மிக பகுதியாகவும் விளங்கிவரும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக, குற்றாலத்தில் இரண்டு சீசன் காலகட்டம் நிலவுவது வழக்கம். அதாவது, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழைக்கால சீசனும், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்கள் சீசனும் களைகட்டுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலிலேயே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வருகை தந்து புனித நீராடி மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் அருவி கரைகளில் உள்ள கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.