கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா கொடியேற்றம்
விழாவின் முக்கிய நிகழ்வான ஆலய தேர்பவனி 15-ந் தேதி நடக்கிறது.;
கோவை புலியகுளத்தில் மிகவும் பழமையான அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான தேர்பவனி திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் காலை 8 மணிக்கு கூட்டுப்பாடற்பலி நடைபெற்றது.
தொடர்ந்து ஆலயத்தின் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மலர்தூவி கொடியினை வரவேற்றனர். பின்னர் கோவை மறைவமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் ஆலய கொடியேற்றினார். இதில் ஆலய பங்குதந்தை அருண் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தொடர்ந்து திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி 15-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல், ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு கோவை மறைவமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு காட்டூர் பங்குத்தந்தை ததேயூஸ் அமல்தாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
திருப்பலி முடிந்ததும் ஆடம்பர தேர்பவனி நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் அன்று இரவு 10 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.