கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.18 லட்சம்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.
இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக இந்த கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 18 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியலை மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது.
இதில் நிரந்தர உண்டியல்கள் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பின்னர் நேற்று 18 நிரந்தர உண்டியல்களும் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன.
குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, நாகர்கோவில் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ப.ஆனந்தன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ச.ஆனந்த், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
காணிக்கை எண்ணும் பணியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உண்டியல்களில் ரூ.17 லட்சத்து 92 ஆயிரத்து 712 ரொக்கமும், 3 கிராம் தங்கமும், 30 கிராம் வெள்ளியும் இருந்தன. இதுதவிர மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.