மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ம் தேதி நாள் முழுவதும் நடை அடைப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் கோவிலில் இருந்து கிளம்புவதாக ஐதீகம்.;

Update:2025-07-07 16:13 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வருகிற 14-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதரை மதுரை மக்கள் தெய்வமாக பார்ப்பதைவிட தாய்-தந்தையாக நினைத்தே வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தனது மகனான திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழாவில் தாய் - தந்தையான மீனாட்சி அம்மன், சொக்கநாதர் ஆகியோர் பங்கேற்பதாக ஐதீகம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேக விழாவிற்கு எழுந்தருள இருப்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி நாள் முழுவதும் நடை அடைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் கோவிலில் இருந்து வருகிற 13-ந்தேதி மாலையிலேயே கிளம்பி விடுகிறார்கள்.

14-ந்தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு விட்டு, அன்று மாலை நடக்கக்கூடிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுவிட்டு, அன்று இரவுதான் மதுரைக்கே திரும்புகிறார்கள்.

எனவே பக்தர்கள் மீண்டும் மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் 15-ந்தேதி காலையில் தான் தரிசனம் செய்ய முடியும். எனவே மதுரையில் மீனாட்சி அம்மன், சொக்கநாதரை தரிசிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் திட்டமிட்டு கிளம்புபவர்கள் வருகிற 13-ந்தேதி மாலை 6 மணி வரைதான் தரிசிக்க முடியும். பின்னர் 14-ந்தேதி நாள் முழுவதும் நடை சாத்தப்பட்டு இருக்கும். திரும்பவும் 15-ந்தேதி காலையில் தான் மீனாட்சியையும், சொக்கநாதரையும் தரிசனம் செய்யமுடியும். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்