மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா: முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்
முளைப்பாரிகளை கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை கோவில் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இரவு மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 600-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேலக்கால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு வைத்து, கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
அதன்பின்னர் முளைப்பாரிகளை கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்தி கடனை செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலத்தில் பொதுமக்கள் மஞ்சள் நீராடியும் பல்வேறு வேஷங்கள் போட்டும் சென்றனர்.
இதேபோல் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விக்கிரமங்கலம் மற்றும் எட்டூர் கிராம பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.