திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்
தேய்பிறை பிரதோஷத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது.;
சிவபெருமானுக்கு உகந்த விரத நாட்களில் முக்கியமானது வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்களாகும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்று விடும் என்பது ஜதீகம். இந்த பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிசேகம், பூஜை நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று தேய்பிறை பிரதோஷத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அசேலேஸ்வரர் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி போன்ற திரவிங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவாரூர் வாசன் நகர் ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் கோவிலில் நந்திக்கு அபிசேகம் நடந்து, அலங்கரத்துடன் தீபாராதனை நடந்தது. இதேபோல் திருவாரூர் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.