திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: தங்கமுத்துகிடா- வெள்ளி அன்ன வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.;

Update:2025-08-17 06:48 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார். 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனை நடந்தது.

காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை வந்தடைந்தனர். மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுத்தனர்.

ஆவணித் திருவிழாவின் 4-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்