திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா.. நாளை மறுநாள் கொடியேற்றம்
சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் மே 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.;
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நாளை மறுநாள் (30.4.2025) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மே 2-ந் தேதி காலை வெள்ளி சூரிய பிரபை வாகனத்திலும் இரவு பூத வாகனத்திலும், 3-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும் இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும், 5-ந் தேதி காலை அன்ன வாகனத்திலும் இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், 6-ந் தேதி மாலை 4:30 மணிக்கு புலி வாகனத்திலும் இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ந் தேதி இரவு 7மணிக்கு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். 8-ந் தேதி யாளி வாகன சேவை, குதிரை வாகன சேவை மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.