தங்கம் விலை அதிரடி உயர்வு... கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் - இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.;
கோப்புப்படம்
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. தினமும் புதிய உச்சம் என்ற பாணியில் அதன் விலையை கேட்டாலே விழிபிதுங்கும் நிலை உள்ளது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டு உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபநாட்களாக காலை மற்றும் பிற்பகல் என 2 நேரங்களில் விலை மாற்றம் இருந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்தது. ஆக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.