டெல்லி: சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
டெல்லி,
தலைநகர் டெல்லியின் அம்பியன்ஸ் மால் பகுதியில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உத்தரகாண்ட்டை சேர்ந்த ரோகித் (வயது 23) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ரோகித் நேற்று இரவு தனது ஓட்டலில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வசந்த் கஞ்ச் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வேகமாக வந்த சொகுசு கார் ரோகித் உள்பட 3 பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், படுகாயமடைந்த ரோகித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஷிவம் (வயது 29) என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.