டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 18 பேர் உயிரிழப்பு
கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று ரெயில்வே அமைச்சர் கூறியுள்ளார். மேலும் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த துயர சம்பவம் குறித்து தனது வேதனையை தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் கூறுகையில், " டெல்லி ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பற்றியே எனது எண்ணம் உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி துணை நிலை கவர்னர் தனது எகஸ் பதிவில் கூறுகையில், " டெல்லி ரெயில் நிலையத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியுள்ளேன். உடனடியாக நிலைமை குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.